Thursday, April 3, 2025

”கற்க நிற்க தக”

 ஜார் மன்னர் தன் குடும்பத்திற்கான சொத்துக்களை கொஞ்சமும் முறையற்ற வகையில் சேர்த்துக்கொண்டிருந்த நேரம். அவரது மனைவி ரியல் எஸ்டேட் வணிகத்தில் என்னென்ன முறைகேடுகளை செய்ய இயலுமோ அத்தனையையும் செய்து சொத்துகளை வாரிக் குவித்துக்கொண்டிருக்க மக்களோ வாழ்வின் விளிம்பு நிலைக்கு சென்றுகொண்டிருந்தார்கள்.

இந்தக் கொடுமையிலிருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறார் லெனின். அதற்கு ஒரு கம்யூனிச அரசமைப்பை நிறுவ வேண்டும். அதை உடனடியாக கட்டமைப்பது சாத்தியமல்ல என்பது அவருக்கு நன்கு தெரியும். ஆகவே ஒரு மக்கள் புரட்சியின் மூலம் கம்யூனிசத்திற்கு முன்னான சோசலிசத்தைக் கட்டமைக்க அவர் உறுதி எடுக்கிறார்.
இதற்காக மக்களை ஏதோ ஒருவகையில் சந்தித்து உரையாற்றுகிறார். அவரது உரைகேட்டு சூடேறிய இளைஞர்கள் புரட்சிக்கு தங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் முன் திரள்கிறார்கள். இதுபோன்ற தினவுமிக்க இளைய பட்டாளம்தான் லெனின் விரும்புகிற மக்கள் புரட்சிக்கு மிகவும் அவசியம். இதை வேறு யாரையும்விட நன்கு உணர்ந்தவர்தான் லெனின். ஆனாலும் அவர்களை அவர் நிராகரிக்கிறார். அவர்களிடம் கூறுகிறார்,
“உங்களது முதல் கடமை படிப்பு, உங்களது இரண்டாது கடமை படிப்பு, உங்களது மூன்றாவது கடமையும் படிப்புதான்”
அன்றைய இளைய பிள்ளைகள் இதை தங்களது தலைவனின் கட்டளையாக ஏற்றார்கள்.
புரட்சி வெற்றிபெற்ற சில நாட்களில் “உலகை குலுக்கிய பத்து நாட்கள்” என்ற நூலை எழுதிய ஜான் ரீட் லெனினை சந்திக்கிறார். ”மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்கிறார்.
இந்த மண்ணை விவசாய மண்ணாகவும், தொழில் மண்ணாகவும் மாற்ற வேண்டும். அதற்கு மின் உற்பத்தியை பேரதிகமாக்க வேண்டும் என்று பதில் அளிக்கிறார்.
அந்தத் தேதியில் அது சாத்தியமே இல்லை என்பது ஜான் ரீடிற்கு தெரியும். இது எப்படி சாத்தியம் என ஆச்சரியத்தோடு கேட்கிறார். சோசலிசம் அதை சாதிக்கும் என்று லெனின் சொல்கிறார். அதை நம்பமுடியாதவராக இருக்கிறார் ஜான் ரீட். ஆகவேதான் “மாஸ்கோவில் கனவு காணும் ஒரு மனிதனை நான் சந்தித்தேன்” என்று எழுதுகிறார்.
அதே ஜான் ரீட் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மாஸ்கோ வருகிறார். லெனின் சொன்னது அத்தனையும் மலர்ந்து சிரித்தபடி அவரை வரவேற்கின்றன. இப்போது எழுதுகிறார்,
“ஒரு மனிதனின் கனவு நிஜமானதை ரஷ்யாவில் கண்டேன். ஆனால் அந்த மனிதன் இன்று உயிரோடு இல்லை”
இந்த மாபெரும் மாற்றத்திற்கான காரணங்களாக கீழ்க்காணும் மூன்று விஷயங்கள் கண்முன் பளிச்சிடுகின்றன,
1) விவசாயத்துறையில் நினைத்தே பார்க்கமுடியாத வகையில் நிகழ்ந்திருந்த புரட்சிகர மாற்றங்கள்
2) தொழிற்துறையில் நிகழ்ந்திருந்த புரட்சிகரமான பாய்ச்சல்
3) அபரிதமான மின் உற்பத்தி
இவைகள்தான் காரணங்கள். ஆனால் இந்தக் காரணங்கள் அளவிற்குப் பேசப்படாத ஒரு காரணம் இருக்கிறது.
அது கல்வி
அது மக்களுக்கான கல்வி, சமூகக் கல்வி. மக்களுக்கான மனிதர்களாக மாணவர்களை மாற்றித்தருகிறமாதிரி கட்டமைக்கப்பட்ட கல்வி.
வெறுமனே உற்பத்தியை மட்டும் பெருக்கி இருந்திருந்தால் அந்த நாடு வளமையானதொரு நாடாக மட்டுமே மாறியிருக்கும். தமக்கு கிடைத்த வளமை தமக்கானது மட்டுமல்ல, உலகின் பசியை போக்குவதற்குமான பங்கு அதில் இருக்கிறது என்று உணர்ந்த சமூகமாக மாறியிருக்க வாய்ப்பில்லை.
தமக்கு கிடைத்திருக்கும் தொழில்நுட்பத்திலும் அறிவிலும் இந்த உலகம் உய்வதற்கான பங்கும் இருக்கிறது என்ற உணர்வை வெறும் உற்பத்தி பெருக்கம் மாட்டும் ஒரு சமுதாயத்திற்கு வழங்கி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.
தன்னிடம் இருக்கும் படை பலமும் ஆயுத பலமும் உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டாலும் அது போர்மூலம் வந்தாலும் பேரிடர்மூலம் வந்தாலும் அவற்றினின்று அந்த மக்களை பாதுகாப்பதற்கானது என்ற உணர்வை வளமையும் அறிவும் மட்டும் ஒரு சமூகத்திற்கு தந்துவிட முடியாது,
1917 புரட்சிக்குப் பிறகு ரஷ்யா மேற்சொன்ன அனைத்தையும் செய்தது.பிறரது இன்னல் கண்டு வருந்துவதும் எந்த பிரதி பலனும் பார்க்காது அதை துடைப்பதற்கான பணியை செய்வதுமாக சோசலிசக் கட்டமைப்பு தகறும்வரை அது ஈரத்தோடே இயங்கிக் கொண்டிருந்தது.
அப்படியானதொரு சமூகத்தை கட்டமைப்பதற்கான கல்வித் திட்டத்தை அது கட்டமைத்தது.
“அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
தந்நோய் போல் போற்றாக்கடை”
உலகம் அறிவை புத்தியாகவும் பிறரது துயர் துடைத்தலை இரக்கம் என்றும் இன்னமும் கருதிக் கொண்டிருக்கிறது. ஆனால் வள்ளுவரோ பிறரது வலியை போக்கும் செயல் இரக்கமல்ல என்றும் அதுதான் அறிவின் அடையாளம் என்றும் கூறினார்.
சோசலிசக் கட்டுமானம் சிதறும் வரை முன்னூற்றிப் பதினைந்தாவது குரளுக்கான அடையாளமாக ரஷ்யா விளங்கியது.
1917 ஒட்டி ரஷ்யாவில் தோன்றி பெருவிளைச்சலைக் கண்ட இந்த கல்விச் சிந்தனை 2000 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவத்தில் இருந்திருக்கிறது. இருந்திருக்கிறது என்று சொல்வதன் மூலம் இந்த சிந்தனை மூப்பினை உரிமை கொண்டாட முயல்கிறோமா என்று கேட்டால் இல்லை என்றெல்லாம் மறுப்பதற்கில்லை.
மிகப்பெரிய கல்விச் சிந்தனையாளரான பாவ்லோ பிரையர் இருபது ஆண்டுகள் ஆய்விற்குப் பிறகு இந்தியக் கல்வியை “வங்கிமுறைக் கல்வி” என்று குறிப்பிட்டார். இந்தக் கல்வி முறையில் மாணவன் என்பவன் வெறும் வங்கி. வங்கியில் வங்கிக்கானது எதுவும் இருக்காது. வங்கியில் பணம் சேமிக்கப்படுவதுபோல யாருக்கோ தேவைப்படும் அறிவை ஆசிரியர் மாணவனது மூளையில் அடுக்கி வைக்கிறார். அதை யாரோ ஒருவரோ அல்லது குழுவோ தமக்கு தேவையானபோது எடுத்து பயன்படுத்திக் கொள்வார்கள்.
பெரியாரும்கூட நமது கல்வி முறையை அப்படித்தான் பார்த்தார். அதனால்தான் அவர் படித்தவர்களை “நடமாடும் அலமாரிகள்” என்று ஒருமுறை குறிப்பிட்டார். யாரோ ஒருவனுக்கு தேவைப்படும் அறிவை சுமந்து திரியும் அலமாரிகளாக இங்கு படித்தவர்கள் இருப்பதாக பெரியார் கவலைப் பட்டார்.
இந்த இடத்தில் தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பு இந்தியாவின் கல்விக் கட்டமைப்பிலிருந்து மாறுபட்டது என்பதை நாம் புரிந்து கொள்ளவும் எடுத்து சொல்லவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
தமிழ் நாட்டிற்கு வெளியே இருக்கும் கல்வி சாதியைக் காப்பாற்றுவதற்காக, நால் வர்ணத்தை பாதுகாப்பதற்காக்க் கட்டமைக்கப் பட்டது. சாதியில் இருந்தும் வர்ணத்தில் இருந்தும் பிள்ளைகளை மீட்டெடுப்பதற்கான கட்டமைப்பு தமிழ்க் கல்வி.
பொதுவாக குழந்தைகளை கற்றுத் தேர்வதற்காகத்தான் பள்ளிக்கு அனுப்புவார்கள். ஆனால் அண்ணல் அம்பேத்கர் வேறுமாதிரி சொன்னார்.
“The children should unlearn what they have learnt” என்பார் அவர். இன்றைய சூழலிலும்கூட பள்ளிக்கு செல்வதற்கு முன்பாக வீடும், தெருவும், சமூகமும் சாதியையும் ஏற்றத்தாழ்வையும் குழந்தைகளுக்கு கற்பித்துவிடுகின்றன. அதைத் தொலைத்துவிட்டு வருவதற்குத்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்கிறார் அண்ணல்.
அப்படியான பள்ளிகளாகத்தான் தமிழ்நாட்டில் பெரும்பான்மைப் பள்ளிகள் இருக்கின்றன.
”கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” என்பது குறள்.
வள்ளுவர் கோரிய கல்வியை,
”கற்க
நிற்க
தக”
என்று மூன்று சொற்களுக்குள் சுருக்கித் வகைப்படுத்துவார் தோழர் தா.பாண்டியன்.
 எதைக் கற்கவேண்டுமோ அதைக் கற்க வேண்டும்
 எதைக் கற்க வேண்டுமோ அதைப் பிழையறக் கற்க வேண்டும்
 கற்க வேண்டியதை பிழையறக் கற்றபின் கற்றதன் வழி வாழ வேண்டும்
எங்கள் கல்வியில் நிறைய குறைகள் இருக்கலாம். இருக்கலாம் என்ன, இருக்கின்றன. ஆனால், நிச்சயமாக இந்தக் கல்வி வங்கிமுறைக் கல்வியல்ல. சமூக நீதியைப் போதிக்கும் தமிழ்க் கல்வி ஒருபோதும் நகர்கிற அலமாரிகளை உருவாக்குவதில்லை.
தமிழ்க் கல்வி “மானுடச் சமூகம் நானென்று கூவு” என்று தன் பிள்ளையைக் கேட்கும்.
“குகனொடு ஐவரானோம்” என்று ராமனைக் கொண்டும் சமத்துவம் போதிக்கும்.
எல்லாவற்றிகும் மேல்,
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பச் சொல்லும் எங்கள் கல்வி.

*************
("திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி” மலரில் வந்த கட்டுரை)

இந்தியாவும் சிவக்கும்

 மாநாட்டில் எங்கேனும் வைப்பதற்காக தோழர் ஜெயசீலன் கேட்டார்

சில தந்தேன்
அவற்றில் ஒன்று
“இலங்கையே சிவக்குமென்றால்
இந்தியாவும் சிவக்கும்”

03.04.2025

Wednesday, April 2, 2025

03.2025

 படித்தோரை

படித்த படிப்பிற்கு
பணி தேடித் திரிந்தோரை
பணியில் அமர்ந்தோரை
பணி தந்த ஊதியத்தில்
சொகுசள்ளிப்
புசித்தோரை
காதைத்
திருகி
கரம்பிடித்து
இடதிழுத்து
பசித்தோரை
பசிக்கான காரணத்தை
அறியாத எளியோரை
நினை
அவனுக்காய்
களமேகி உழை என்றுரைத்த
ஊனே
எங்கள் உயிரே
செங்கொடியே
வைகை நீராட
மாமதுரை போனவளே
பார்க்க வாய்க்காமல்
நான் போக வாய்ப்புண்டு
பிள்ளைக்கும்
பேரனுக்கும்
வாய்க்காமல் போனாலும்
என்
எள்ளோ
கொள்ளோ
இல்லை
அடுத்தடுத்து வருபவரோ
உன்னை
கோட்டை ஏற்றி
வருங்காலம்
காப்பார்கள்
இன்குலாப்
இன்குலாப்
இன்குலாப்
ஜிந்தாபாத்

02.04.2025

Tuesday, April 1, 2025

புல்டோசர் முன் நின்றபடி

அது சரி,

அவர்களுக்காச்சும் ஐகானா புல்டோசர் இருக்கு. உங்களுக்கென்னடா இருக்கு மாப்ள?

அவங்களுக்கு புல்டோசர் ஐகான் எனில் எங்களுக்கு

புல்டோசர் முன் நின்றபடி முடிஞ்சா இடிச்சுப் பாரென்று நின்று கர்ஜிக்கும் பிருந்தா படம்டா...

புல்டோசரை தங்களது கம்பீரத்தின் சின்னமாக

யோகி புல்டோசர் கொண்டு இடித்த ஐந்து வீடுகளுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது

ஐந்து வீடுகள்தானா

இல்லையெனில் கண்டுபிடித்து வழக்குத் தொடுக்க வேண்டும்

புல்டோசரை தங்களது கம்பீரத்தின் சின்னமாக பாஜக நினைத்தது

அடி விழுந்திருக்கிறது

65/66 காக்கைச் சிறகினிலே, மார்ச் 2025

 பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி நிறைவுற்ற இரவு. நான், இந்திய மாணவர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் தோழர் ராமகிருஷ்ணன் மற்றும் திருப்பூர் தோழர் தங்கவேல் ஆகியோர் பாரதி புத்தகாலய ஸ்டாலில் அமர்ந்து கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்போது அங்கு இரண்டு நண்பர்கள் வருகிறார்கள். வந்தவர்கள் மிச்சப் புத்தகங்களைக் கணக்கெடுத்து பார்சல் செய்வதில் எங்களுக்கு உதவ ஆரம்பிக்கிறார்கள். வேலையினூடே ஆரம்பித்த உரையாடல் கணக்கெல்லாம் முடித்து பார்சல்களை ரெகுலர் சர்வீசில் ஒப்படைத்துவிட்டு தோழர் தங்கவேலு அவர்களை விடியற்காலம் பேருந்து ஏற்றிவிடும்வரை தொடர்கிறது.

 
உரையாடலினூடே அந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் அருட்தந்தை கஸ்பர் அவர்கள் குறித்த ஒரு தகவலைச் சொன்னார். வேறொன்றுமில்லை, ஒரு புத்தகக் கண்காட்சியில் உரையாற்றுவதற்கு பாதர் கஸ்பரைக்  கேட்டிருக்கிறார்கள். அவரும் இசைவைத் தந்திருக்கிறார்.
 
திட்டமிடல் குறித்தான ஒரு உரையாடலில் பாதர் ஒருவரை அழைத்து வந்தால் சங்கிகள் பிரச்சினை செய்தால் என்ன செய்வது என்ற அச்சம் நிர்வாகிகளுக்கு வந்திருக்கிறது. சங்கிகள் கொஞ்சம் பலமாக இருக்கிற ஊர் அது.
 
அவர்களது கலந்துரையாடலிn டே அவர்களது அச்சமும் வளர்ந்தபடியும் கெட்டிப்பட்டபடியேயும் நகர்ந்திருக்கிறது. நிச்சயமாக சங்கிகள் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்ற உறுதியான முடிவிற்கு வந்திருக்கிறார்கள். அதை எதிர்கொள்ளும் பலம் இல்லாதவர்கள் இல்லை அவர்கள். ஆனால் அமைதியாக புத்தகக் கண்காட்சியை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள். என்ன செய்வதென்று யோசித்த நிர்வாகம் அருட்தந்தை கஸ்பரிடம் நிலவரத்தை எடுத்துச் சொல்லி தவிர்த்துவிடலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.
 
ஒரு வழியாக கஸ்பர் இன்றி புத்தகக் கண்காட்சி அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. இதைக் கேட்ட தோழர் ராமகிருஷ்ணன் அதிர்ந்து போகிறார். கிறிஸ்தவ பெயராக இருந்தால் கூட்டத்தில்கூட பேசமுடியாதா என்று கேட்டார்.
 
கொலை செய்யப்படுவதற்கே ஒரு பெயர் போதும் ராமகிருஷ்ணன் என்று நான் சொன்னபோது அவரது முகம் வாடித் தொங்கி விட்டது.
 
இந்த பயத்தில்தானோ என்னவோ எட்வின் தோழர் அவரோட பையனுக்குகிஷோர்என்றும் பாப்பாவிற்குகீர்த்தனாஎன்றும் பெயர் வைத்துவிட்டார் என்று இடையில் வந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் சொன்னபோது அனைவருமே சிரித்துவிட்டோம். ஆனால் இருவருக்கும் பெயர் வைத்ததற்கு பயமோ அல்லது புத்திசாலித்தனமோ காரணம் அல்ல.
 
11.07.1990 அன்று கிஷோரிலால்என்றொருவர் இறந்துபோனதாக செய்தியை தற்செயலாக செய்தித் தாள்களில் வாசிக்கிறேன். எத்தனையோ மரணச் செய்திகளை வாசிக்கிறோம். ஆனால் கிஷோரிலால் மரணமடைந்தது புதன்கிழமை என்பது உள்ளிட்டு இதுநாள் வரைக்கும் நினைவில் இருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அன்றுதான் 18 மாதங்களாக இழுத்துக் கொண்டிருந்த என்னுடைய பணிநியமன உத்திரவிற்கு ஒப்புதல் கிடைக்கிறது.
 
கிஷோரிலால் யாரென்று தெரியாததால் சுவாரசியமற்று இருந்த என்னை அவர் பகத்தின் நண்பர் என்று யாரோ சொன்னது உசுப்பிவிடுகிறது. பகவதி சரண், சந்திரசேகர ஆசாத், ராஜகுரு, சுகதேவ் என்றெல்லாம் ஓரளவு தெரிந்து வைத்திருந்த எனக்கு கிஷோரிலால் யாரென்று தெரியவில்லை. தேட ஆரம்பிக்கிறேன்
 
 
பகத்தோடவே போயிருக்க வேண்டியவன்பா. 18 வயசாகலங்கறதால தப்பிச்சான்என்று யாரோ ஒருமுறை சொல்ல உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. இன்னும் அதிகமாய் தேட ஆரம்பிக்கிறேன். தெரிந்திருக்கக்கூடும் என்று நம்புபவர்களிடம் எல்லாம் விசாரிக்க ஆரம்பிக்கிறேன்
 
07.10.1930  அன்று பகத், சுகதேவ், ராஜகுரு ஆகியோரோடு கிஷோரிலாலுக்கும் சேர்த்துதான் தூக்கு வழங்கப்படுகிறது. ஆனால் 18 வயது நிரம்பவில்லை என்பதால் ஆயுளாகக் குறைக்கப்படுகிறது என்ற செய்தி கிடைக்கிறது. இன்னும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது
 
எப்போதும் உற்சாகமாகவும் சிரித்தபடியேயும் இருப்பவர் அவர் என்று தெரிய வருகிறது. 18 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். விடுதலைக்குப் பிறகும் காங்கிரஸ் அரசாங்கம் எட்டு ஆண்டுகள் அவரை சிறையில் வைத்திருக்கிறது.
 
ஆக, கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் சிறையில் இருந்த மனிதன்
இரண்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்று கிடைக்கிற செய்திகள் எல்லாம் ஆர்வத்தை அதிகப்படுத்துகின்றன.
 
1936 இல் சிறையில் இருந்தபடியே அன்றைக்கு ஒன்றுபட்டு இருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதற்காக விண்ணப்பிக்கிறார். 1942 இல் சேர்த்துக்கொள்ளப்படுகிறார். சிறையில் இருந்து 1946 இல் விடுதலையானதும் நேரே கட்சி அலுவலகம் செல்கிறார்.
 
கட்சி பிரிந்தபோது CPM வருகிறார். ஒருக்கால் தூக்கு இல்லாமல் ஆயுளாக இருந்திருப்பின் பகத்தும் சுகதேவும் ராஜகுருவும்கூட இங்குதான் வந்திருப்பார்கள்.
 
தம்பி பிறந்ததும் அப்பாவிடம் விவரமெல்லாம் சொல்லி தம்பிக்கு கிஷோரிலால் என்று பெயர் வைக்க அனுமதி கேட்கிறேன். அப்பா திமுக. அவருக்கு கிஷோரிலாலைப் பிடித்துப் போகிறது. ஆனால் இந்த லால்உறுத்துகிறது. ”லால எடுத்துடேன் என்கிறார். தம்பி கிஷோரான வரலாறு இதுதான்.
 
தம்பிக்கு கிஷோர் என்று இருப்பதால் பாப்பாவிற்கு கி அல்லது கீ தொடங்குகிற பெயராக வேண்டும் என்று விக்டோரியா கேட்டபோது சட்டென வந்த பெயர்தான் கீர்த்தனா. கீர்த்தனா என்றால் இசை. கீர்த்தி என்று அழைத்தாலும் இசைதான். இசை எனில் புகழ். இப்படியெல்லாம் யோசித்த எங்களுக்கு அது தெலுங்கு என்பது அப்போது சத்தியமாக நினைவிற்கு வரவில்லை.
 
பாப்பாவிற்கும் கிஷோரிலால் தோழருக்கும்கூட சம்பந்தம் இருக்கிறது. 1999 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழில் கீர்த்தனா பிறந்தாள். அதுதான் மூவருக்கும் தூக்கும் கிஷோரிலாலிற்கு ஆயுளும் விதிக்கப்பட்ட நாள். இரண்டு பிள்ளைகளுக்கும் தோழர் கிஷோரிலாலிற்கும் தொடர்பிருப்பதில் மகிழ்ச்சி. இருவரும் மக்கள் சார்ந்து வாழட்டும்.
 
போக, பெயரே குழந்தைகளைக் கொன்றுபோடுமோ என்ற பயத்தோடே ஒரு தாயோ தகப்பனோ தமது குழந்தைக்கு பெயர் தேடவேண்டிய நிர்ப்பந்தம் வருமானால் அதற்காக அதற்கு காரணமானவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்.
 
************
 
திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளியின் முப்பதாவது ஆண்டுமலர் வந்திருக்கிறது. அதில் அந்தப் பள்ளியின் ஆசிரியை ப..மாலா அவர்கள் எழுதிய ஆசிரியர் மகுடம் எட்டிப் பார்த்ததுஎன்றொரு கட்டுரை வந்திருக்கிறது. அதில் ஓரிடத்தில் அவருக்கும் அவரது வகுப்புக் குழந்தை ஒருவனுக்கும் இடையேயான உரையாடல் வரும். திருப்பரங்குன்றம் அவனுக்கில்லை எனக்குத்தான் என்று வரிந்து வரும் ஒவ்வொருவருக்கும் அந்த உரையாடலை சிபாரிசு செய்கிறேன்.
 
அந்தக் குழந்தை முதல்நாள் பள்ளிக்கு வரவில்லை. மாலா அந்தக் குழந்தையிடம் கேட்கிறார்,
 
ஏண்டா நேத்து பள்ளிக்கு வரல?”
 
கோயிலுக்கு போனோங்க அக்கா
 
அந்தப் பள்ளியில் ஆசிரியைகளை அக்கா என்றுதான் குழந்தைகள் அழைப்பார்கள். இன்னொருதரம் பிறக்க வேண்டும். அந்தப் பள்ளியில் சேர்ந்து அந்த அக்காக்களிடம் படிக்க வேண்டும். அவர்களின் உரையாடலின் முத்தாய்ப்பான பகுதி தொடர்கிறது.
 
எந்தக் கோவிலுக்குடா போனீங்க?”
 
அதான், அந்த சாமியெல்லாம் இருக்குமில்ல  அந்தக் கோயிலுக்குதாங்க அக்கா
 
மாலாவையும் அந்தக் குழந்தையையும் அணைத்துக் கொள்கிறேன்.
 
கோயில்களில் சாமிகள் இருப்பதாக குழந்தைகள் நம்புகிறார்கள். அப்படியே விட்டுவிடுவோம் நண்பர்களே. கோவில்களில் ஏதோவொரு சாமி வாசம் செய்யட்டும். சண்டை வேண்டாம்.
 
முடியுமானால் அல்லாவும் முருகனும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது மாதிரி ஒரு கோவிலைக் கட்டுவோம். அவர்களது உரையாலுக்கு இடையூறு செய்யாமல் அவர்களை வணங்கிவிட்டு வருவதற்கு கற்றுக் கொள்வோம்.

 


 


இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...